பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி - சத்யராஜ் வீடியோ
பேரறிவாளனுக்கு மட்டுமல்ல ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
சென்னை: பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் விடுதலை
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பேரறிவாளன் பரோல் விடுதலை குறித்து கருத்து கூறிவருகின்றனர். சமூக வலை தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேரறிவாளன் பரோல் குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இன்றைய நாள் என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். காரணம் பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விடுதலை கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி. அவருக்கு மட்டுமல்ல, ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும்.
அய்யா குயில்தாசன் அவர்களுக்கும், அம்மா அற்புதம்மாள் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தற்போது படப்பிடிப்புக்காக வெளிநாடு வந்துள்ளேன். அவரது பரோல் முடியும் முன்பாக எனக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டால் சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.