7 பேர் விடுதலை.. ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார் அற்புதம்மாள்.
சென்னை: தமிழக ஆளுநரை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று நேரில் சந்தித்தார். அப்போது 7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் அற்புதம்மாள் வலியுறுத்தினார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவு எடுக்கலாம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரதவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது.
வலுக்கும் கோரிக்கைகள்
ஆனால் அந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த வித முடிவையும் எடுக்கவில்லை, அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் 7 பேர் விடுதலை தாமதமாகி கொண்டே வருகிறது. இந்த தாமதம் வேண்டாம் என்றும் விரைந்து ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
ஆளுநரிடம் மனு
இது தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.
அற்புதம்மாள் பேட்டி
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தேன். அந்த மனுவில் நீதிபதி கே.டி. தாமஸின் தீர்ப்பு விவரத்தையும் இணைத்திருக்கிறேன்.தமது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்தும் விளக்கினேன்.
நம்பிக்கை உள்ளது
அதனை ஆளுநர் கனிவுடன் கேட்டார். மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். எனவே அமைச்சரவை பரிந்துரையை உடனடியாக பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது". இவ்வாளு அற்புதம்மாள் கூறினார்.