மருத்துவ சிகிச்சை தேவை.. பேரறிவாளனை புழலுக்கு மாற்றுமாறு அமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை
வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனை மருத்துவ சிகிச்சைக்காக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்: பேரறிவாளனுக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அவரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அற்புதம்மாள் அமைச்சர் வீரமணியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
1991ம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு காரணமாக இருந்ததாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுவதால் அவர் சென்னைக்குச் சிகிச்சைக்காக அவ்வப்போது அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்றுமாறு அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்குச் சிகிச்சையளிக்க அங்கு வசதி இல்லை என சிறைத்துறை மறுத்துவிட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார். இதனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை புழல் சிறைக்கு மாற்றி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என அமைச்சரிடம் அற்புதம்மாள் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், பேரறிவாளனின் பரோல் மனுவையும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.