பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்ய ஆசை... தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சி
பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய விரும்புவதாக அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ஜோலார்பேட்டை : 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பரோலில் வந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திடீர்னு வந்துட்டதால சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒரு மாத கால பரோல் முடிவதற்குள் விடுதலை என்ற செய்தி வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் விரும்புகிறேன்.
நானும், என் கணவரும் நோயாளிகள் தான் ஆனால் என் மகனை பார்த்துமே உடலுக்கு தெம்பு வந்தது போல இருக்கிறது. என்றாலும் இனி தான் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்க வேண்டும், என் மகனுக்கும் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். வந்த பரபரப்பில் இருக்கிறோம், இன்னும் அந்த பரபரப்பு எனக்கு அடங்கவில்லை.
திக்கு முக்காடிய தாய்
27 வருடங்களாக போராடுகிறேன் இரண்டு முறை ஜெயலலிதாவினால் விடுமுறை என்று சொல்லி தடைபட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் இதோ வந்துவிடுவார், அதோ வந்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால் 27 வருடம் ஓடிவிட்டது. அதனால் தான் நேற்று கூட நான் சொன்னேன், என் மகன் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் தான் நம்புவேன் என்று அவன் வந்த பிறகு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
சேர்ந்து இருக்கப் போகிறோம்
எங்களையெல்லாம் பார்த்த மகிழ்ச்சியில் அவனுக்கும் தூக்கம் வரவில்லை, இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தோம். குழந்தைகளாக இருந்த போது நாங்கள் இந்த வீட்டில் ஒன்றாக இருந்தோம் இப்போது மீண்டும் வந்திருக்கிறான். என் சின்ன மகளும் வந்தவிடுவாள் நாங்கள் எல்லோரும் இந்த வீட்டில் ஒன்றாக இருக்கப் போகிறோம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமணம் செய்ய ஆசை
19 வயதில் விசாரணைக்காக அழைத்து சென்றனர், ஆனால் இத்தனை ஆண்டுகள் இளமை காலத்தை சிறையிலேயே கழித்துவிட்டான். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் அவன் வந்துள்ளான், அவனை வெளியே அழைத்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் அவனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அது நிறைவேறுமா என்று தெரியவில்லை.
கவலை
என் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன், பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டேன். ஆனால் என் ஒரே மகன் வாழ்க்கையை வாழவில்லை என்பது கஷ்டமாக இருக்கிறது. இனி வரும் கால சூழலை பொறுத்து அடுத்த கட்ட ஏற்பாடுகளை செய்ய நான் திட்டமிட்டுள்ளேன் என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.