ஸ்டாலின் கன்னத்தை கிள்ளி முதல் வாழ்த்தை பதித்த அன்பழகன்!
அன்பழகனிடம் வாழ்த்து பெற்றுக் கொண்டார் ஸ்டாலின்.
சென்னை: திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது கன்னத்தை கிள்ளி தனது முதல் வாழ்த்தை தெரிவித்தார் பொதுச்செயலாளர் அன்பழகன்.
திமுகவின் ஆரம்ப காலத்திலிருந்தே தன்னை ஒரு தூணாக நிலைநிறுத்தி கொண்டு, கட்சியின் நெறி பிரழாமல் காத்து வருபவர் அன்பழகன்.
அறிவுரை வழங்கினார்
இவரை பற்றி ஸ்டாலின் தெரிவிக்கும்போதெல்லாம், திமுகவின் கொள்கைகளிலிருந்து இம்மியளவு கூட விலகாத உறுதி மிக்க தலைவர் என்றும், தான் இளைஞரணியில் இருக்கும்போது திராவிட கருத்துக்களை போதித்து, தனக்கு ஊக்கப்படுத்தி, உரிய அறிவுரை வழங்கிய வழிகாட்டி என்றும் பெருமைபட பலமுறை தெரிவித்துள்ளார்.
அன்பழகன் அறிவிப்பு
இந்நிலையில், தான் மதித்து போற்றும் ஆசான் மற்றும் மூத்த தலைவரான பேராசிரியர் அன்பழகன் "திமுக தலைவர் ஸ்டாலின்" என்ற மிக முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளது மேலும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
போட்டியின்றி தேர்வு
காலை 9 மணிக்கு கூட்டம் அறிவாலயத்தில் கூடியதுமே விறுவிறுவென பறந்தன கட்சியின் நிகழ்வுகள். அப்போது கட்சியின் தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அன்பழகன் அறிவித்தார்.
கன்னத்தை கிள்ளினார்
திமுகவின்-2வது தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, மேடையில் அமர்ந்திருந்த அன்பழகனிடம் சென்று ஆசியை வாங்கி கொண்டார். அப்போது ஸ்டாலினுக்கு அன்பழகன் பொன்னாடை போர்த்தினார். அத்துடன், ஸ்டாலினின் கன்னத்தை கிள்ளி வாழ்த்தையும் தெரிவித்தார்.