2 பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல்.. ரவுடி புல்லட் நாகராஜன் கைது
Recommended Video
தேனி: எந்த கொம்பனாலும் என்னை பிடிக்க முடியாது என உதார் விட்ட புல்லட் நாகராஜன் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் மீது 1996-ஆம் ஆண்டு முதல் 71 வழக்குகள் இருந்தன. அவை அனைத்துக்கும் இவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது.
தனது மனைவியையே கொலை செய்த வழக்கில் புல்லட் நாகராஜனின் அண்ணன் ரமேஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த பெண் மருத்துவரிடம் தூக்க மாத்திரை கேட்டு அவர் கொடுக்காததால் தனது சட்டை கிழற்றி அவர் மேல் எறிந்தார்.
புல்லட்டிடம் தகவல்
இதையடுத்து சிறைத் துறை கமாண்டோக்களை அனுப்பி புல்லட்டின் சகோதரரை சிறை துறை எஸ்பி ஊர்மிளா "சிறப்பாக கவனித்ததாக" கூறப்படுகிறது. இதனிடையே நன்னடத்தையின் கீழ் வெளியே வந்த அண்ணன், தன்னை எஸ்பி அடித்தது குறித்து புல்லட்டிடம் கூறினார்.
தாக்கிய மதனகலா
இதனால் பொங்கிய புல்லட் நாகராஜன் வாட்ஸ் ஆப் மூலம் ஆடியோவில் மதுரை எஸ்பி ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது லாரி ஏறும் என்னும் அளவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் ஜெயமங்கலத்தில் கைதிகளை தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா அடித்ததாக கூறப்படுகிறது.
மிரட்டல்
இதையடுத்து மதனகலாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன், காக்கி சட்டை போட்டா விஜயசாந்தினு நெனப்பா, எனக்கு கோபம் வந்தால் மிருகம் போல் வேட்டையாடிடுவேன் என்றும் பின்னர் ஈ மொய்த்தபடி அனாதையாக சாகாதீர் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார்.
கைது
தொடர்ந்து இரு காவல் துறை அதிகாரிகளை புல்லட் நாகராஜன் மிரட்டியதை அடுத்து அவரை பிடிக்க 7 தனிப்படைகள் தேனி விரைந்தனர். இந்நிலையில் தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த புல்லட் நாகராஜனை பெரியகுளம் போலீஸார் பார்த்துவிட்டு விரட்டினர். இவர்களை பார்த்து ஓடிய புல்லட்டை பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்று பிடித்தார். இதையடுத்து அவர் தென்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.