வெறித்தனமாக ஓடி வந்து.. தாவிக் குதித்து.. சரமாரியாக தாக்கிய.. அப்பா மகன்கள்.. ஷாக் வீடியோ!
பெரியகுளம்: மகளை காதல் கல்யாணம் செய்த வாலிபர் மீது வெறித்தனமாக, அந்த பெண்ணின் தந்தையும், இரு சகோதரர்களும் நடத்திய வெறித் தாக்குதலால் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த 3 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை வெறித்தனமாக அடித்து உதைத்து கட்டையால் அடிக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகள் தற்போது வைரலாகியுள்ளன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது ஏ. புதுக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. 24 வயதாகும் இவர் சேகர் என்பவரது மகள் ரேகாவை (24 வயது) காதலித்து வந்தார். இருவரும் வீட்டினரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணமும் செய்து கொண்டனர்.
ஓட்டு போட்டாச்சு.. ஓட்டு சீட்டுக்கள் கிடப்பதோ ரோட்டோரம்..உள்ளாட்சி தேர்தலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோபத்தில் பெண் குடும்பம்
இந்த திருமணத்தால் ரேகாவின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். அவர்களின் கோபத்துக்கு ஆளானதால் ஏ. புதுக்கோட்டை கிராமத்தை விட்டு வெளியேறிய ராஜு - ரேகா தம்பதி பெரியகுளத்திற்குக் குடியேறினர். அங்குள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
கடைக்குள் புகுந்து தாக்குதல்
இந்த நிலையில், அங்குள்ள மளிகைக் கடைக்கு வந்துள்ளார் ராஜு. அப்போது சேகரும், அவரது மகன்கள் பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் வழி மறித்து சண்டையில் இறங்கினர். கையில் கிடைத்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்து போன ராஜு கடைக்குள் ஓடினார். அவரை விடாமல் 3 பேரும் துரத்தினர்.
ஒளிந்தும் விடாமல் தாக்குதல்
கடைக்குள் ஓடி வந்த ராஜு அங்கிருந்த கடைக்காரப் பெண் பின்னால் போய் ஒளிந்து காப்பாற்றுமாறு கதறினார். அப்படியும் விடாத சேகரும், அவரது மகன்களும் கையில் கிடைத்ததை எடுத்து சரமாரியாக தாக்கினர். அதிலும் சேகரின் ஒரு மகன் சினிமாவில் வருவது போல தாவித் குதித்து ராஜுவை சரமாரியாக தாக்கினார்.
தாவிக் குதித்து தாக்குதல்
கடைக்குள் நடந்த இந்த கொலை வெறித் தாக்குதலால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. கடைக்காரர்களும், மேலும் சிலரும் புகுந்து சேகரையும் அவரது மகன்களையும் விலக்கி விட்டு வெளியேற்றினர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். படுகாயமடைந்து கிடந்த ராஜுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் வீடியோ பெரும் பரபரப்பாக பரவி வருகிறது.