2017-இல் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் #newsmaker2017
2017-இல் பெரிதும் பேசப்பட்டு கடைசி நேரத்தில் மக்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டார் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்.
சென்னை: 2017-இல் பெரிதும் பேசப்பட்டவர் ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன்.
2017-ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் யார், அதிகம் செய்திகளில் அடிபட்டவர்கள் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு மக்கள் 6-ஆவது இடத்தை கொடுத்துள்ளனர்.
இதில் ராஜஸ்தானில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனுக்கும் மக்கள் மனதில் இடம் கிடைத்துள்ளது.
கொளத்தூரில் கொள்ளை
கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-இல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மாடிக் கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர்கள் மேல்புறத்தை ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக சென்ராம் , கேலாராம், சங்கர்லால், தவ்ராம் கைது செய்யப்பட்டனர். சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க ராஜஸ்தானுக்கு 6 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் சென்றிருந்தனர்.
மதுரவாயல் இன்ஸ்பெக்டர்
ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் சென்றிருந்தனர். அப்போது பாலி மாவட்டத்தில் ராம்பூர்கலா என்ற இடத்தில் செங்கல் சூளைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளையர்கள் பெரியபாண்டியனின் துப்பாக்கியை பறித்து போலீஸாரை நோக்கி சுட்டதாகவும், அதில் பெரியபாண்டியன் இறந்துவிட்டதாகவும், முனிசேகர் காயமடைந்ததாகவும் தனிப்படையில் இடம்பெற்றிருந்த போலீஸார் தெரிவித்தனர்.
மக்கள் அதிர்ச்சி
இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. பெரியபாண்டியனின் மனைவி ரேகா மற்றும் அவரது இரு ஆண் பிள்ளைகள் கதறியதை பார்த்த மக்கள் மனமும் வருந்தியது. தனக்கு சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடம் கட்டுவதற்காக பெரியபாண்டியன் தானமாக வழங்கியதாகவும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் கூறினார். இது இவ்வாறிருக்க, பெரியபாண்டியனின் உடல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாலைபுதூருக்கு கொண்டு வரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெரியபாண்டியனை சுட்டது கொள்ளையர்கள் அல்ல
இந்நிலையில் ராஜஸ்தான் எஸ்பி பார்கவ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில்ஸ, பெரியபாண்டியனை சுட்டது கொள்ளையர்கள் அல்ல என்றும் உடன் வந்த முனிசேகர் தான் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கொள்ளையர்கள் இருந்த பேக்டரிக்கு பெரியபாண்டியன், முனிசேகர் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்ததாகவும், அப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கியதாகவும், அந்த தாக்குதலில் இருந்து போலீஸார் அனைவரும் தப்பி வெளியேறியதாகவும் அப்போது கொள்ளையர்களிடம் மாட்டி கொண்ட பெரியபாண்டியனை காப்பாற்றும் முயற்சியாக கொள்ளையர்களை முனிசேகர் சுட்டபோது குண்டு தவறி பெரியபாண்டியன் மீது பாய்ந்ததாகவும் கூறினார்.
மனைவியிடம் முனிசேகர் மன்னிப்பு
குறி தவறி பெரியபாண்டியனை முனிசேகரனே சுட்ட நிலையில் உண்மையை கூறாமல் கொள்ளையர்கள் சுட்டதாக கூறியது என்று அனைத்து தரப்பு மக்களும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து வந்த முனிசேகர், பெரியபாண்டியனின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் தான் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். பெரியபாண்டியன் கொலை சம்பவம் குறித்து ராஜஸ்தான் எஸ்பி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக இந்த சம்பவத்தை தீரன் படத்துடன் ஒப்பிடப்பட்டது. இவ்வாறு கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து ஊடகங்களிலும் பெரியபாண்டியன் பேசப்பட்டார்.