புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதம்.. போலீஸ் குவிப்பு
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பவே தனது அனுமதியின்றி அட்மின் போட்டுவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் எச் ராஜா.
இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பாஜக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை விடுதி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.