பெரியார் சிலை குறித்த பதிவு: ஹெச். ராஜா வருத்தம்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவுக்கு பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். தன் அனுமதியின்றி, தன் பக்கத்தை நிர்வகிப்பவர் அவ்வாறு பதிவிட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா செவ்வாய்க் கிழமை காலையில் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டிருந்த எச். ராஜா, "லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை" என்று கூறியிருந்தார்.
அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை அவர் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக வேலூரில் பெரியார் சிலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்:
- "ஹெச்.ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்"
- லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்
இந்த நிலையில், தன்னுடைய பக்கத்தில் வெளியான பதிவுக்கு எச். ராஜா வருத்தம் தெரிவித்தார். புதன் கிழமை காலையில் அவர் தன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், "நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin, என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், "கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல." என்றும் கூறியிருக்கிறார்.
இதர செய்திகள்:
- எம்.ஜி.ஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் - நடிகர் ரஜினிகாந்த்
- சிரியாவில் தாக்குதல்கள் தொடரும்: அதிபர் அல்-அசாத்
- இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு
- கல்லூரிப் பாடமாகும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்