தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறினார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் எச் ராஜா
Recommended Video
திண்டுக்கல்: தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியன் என்று கூறியதாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்படுவதை போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது பதிவை நீக்கிய எச் ராஜா, தன்னுடைய அனுமதியின்றி தனது அட்மின் அந்த கருத்தை பதிவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.
மீண்டும் சர்ச்சைப் பேச்சு
ஆனாலும் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் என்ற சனியன்
இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈவேரா பேசியதாகவும் எச் ராஜா கூறினார்.
திணிக்கப்பட்ட திராவிடம்
தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம் என்றும் அவர் கூறினார். இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசை பாடுவதாகவும் எச் ராஜா குற்றம்சாட்டினார்.
மீண்டும் சர்ச்சை
ஃபேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை குறித்த அவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெரியார் குறித்து எச் ராஜா மீண்டும் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.