வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனைமுத்து "கூட்டமைப்பாக" இணைகின்றனர்?
சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பிரிந்து கிடக்கும் திராவிடர் இயக்கங்கள் ஒன்றிணைந்து "கூட்டமைப்பாக" செயல்பட இருக்கின்றனர்.
சென்னையில் மறைந்த ஊடகவியலாளர் பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கவிஞர் அறிவுமதி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறிவுமதி
இதில் பேசிய கவிஞர் அறிவுமதி, பிரிந்து கிடக்கும் திராவிடர் இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு வேண்டுகோள் வைத்தார். அதே மேடையில் நடிகர் சத்யராஜூம் இதை வழிமொழிந்து பேசினார்.
வீரமணி அழைப்பு
இதற்கு பதிலளித்து பேசிய தி.க. தலைவர் கி. வீரமணி, பெரியார் திடல் அனைவருக்கும் பொதுவானது, எப்போதும் திறந்தே இருக்கிறது, நம்மை பிரிக்கும் காரணிகளை புறம்தள்ளி இணைக்கும் காரணிகளுக்கு முக்கியத்துவம் தருவோம் என்று கூறினார்.
கூட்டமைப்பு?
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம், வே. ஆனைமுத்து தலைமையிலான மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவை திராவிடர் கழகத்துடன் இணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்படலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முழு ஆதரவு
வெவ்வேறு இயக்கங்களாக பிரிந்து கிடந்த போதும் "கூட்டமைப்பாக" செயல்படுவதற்கு அனைத்து திராவிடர் இயக்கத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த கூட்டியக்கம் காலத்தின் அவசியம் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
திராவிடர் கழகம்
தமிழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கியது திராவிடர் கழகம். தேர்தலில் அரசியலில் பங்கேற்காமல் மதவாத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண் உரிமை, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கான இயக்கங்கள், போராட்டங்களை நடத்தி வருகிறது திராவிடர் கழகம். இதன் தலைவராக தற்போது கி. வீரமணி இருந்து வருகிறார்.
ஆனைமுத்து
திராவிடர் கழகத்தின் சில நிலைப்பாடுகளில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் 1970களிலேயே முதுபெரும் பெரியாரியல்வாதியான வே. ஆனைத்து அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார். அவர் தற்போது மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
கோவை ராமகிருஷ்ணன்
அதேபோல் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறி திராவிடர் கழகம் என்ற பெயரிலேயே கோவை. ராமகிருஷ்ணன் செயல்பட்டு வந்தார். பின்னர் அவரது இயக்கம் தமிழ்நாடு திராவிடர் கழகமாக மாறியது.
ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராஜேந்திரன்
1996-ல் திராவிடர் கழகத்தை விட்டு முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன், மு.பாலகுரு ஆகியோர் வெளியேறி பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்தனர்.
கொளத்தூர் மணி
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் விவகாரத்தில் அப்போதைய திராவிடர் கழக அமைப்புச் செயலராக இருந்த கொளத்தூர் மணியின் உதவி கோரப்பட்டது. ஆனால் திராவிடர் கழக தலைமை அதை விரும்பவில்லை. அதனால் கொளத்தூர் மணி தமது ஆதரவாளர்களுடன் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார்.
இணைந்து பிரிதல்
பின்னர் கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராசேந்திரன் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் இணைந்து பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒரே அமைப்பாக செயல்பட்டனர். அண்மையில் மீண்டும் இவர்கள் பிரிந்து கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகமாகவும், கொளத்தூர் மணி- விடுதலை ராசேந்திரன் ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு போராட்டங்களில் இரு இயக்கத்தினரும் கூட்டாகவே கலந்து கொண்டும் வருகின்றனர்.
தனித்தனி போராட்டங்கள்
தமிழர் உரிமைப் போராட்டங்கள், மதவாத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, சமூக நீதி போன்றவற்றில் இதுநாள் வரை தனித்தனியே இந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.
கூட்டமைப்பு
தற்போது கி. வீரமணி விடுத்துள்ள அழைப்பின் மூலம் இத்தனை திராவிடர் இயக்கங்களும் ஒன்றாக இணைந்து "கூட்டமைப்பாக" செயல்படுவதற்கு சாத்தியங்கள் உருவாகி இருக்கின்றன.
கொளத்தூர் மணி கருத்து
இது குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு முயற்சியை வரவேற்கிறோம். இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எந்த ஒரு மனத்தடையும் இல்லை என்றார்.
கோவை ராமகிருஷ்ணன் கருத்து
இதேபோல் பிரச்சனைகளின் அடிப்படையில் கூட்டமைப்பாக இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை. மதவாத எதிர்ப்பு, மாநில உரிமைகளுக்காக பெரியார் இயக்கங்கள் ஓரணியில் இணைவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
திராவிடர் இயக்க கூட்டமைப்பு
அப்படி அனைத்து பெரியார் இயக்கங்களும் ஓரணியில் திராவிடர் இயக்க கூட்டமைப்பாக இணைந்தால் தமிழகத்தின் உரிமை பிரச்சனைகள், ஈழத் தமிழர் பிரச்சனை போன்றவை இந்த கூட்டமைப்பின் பொதுவேலைத் திட்டங்களில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.