டிடிவி தினகரன் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு மீண்டும் அனுமதி மறுப்பு
டிடிவி தினகரன் திருச்சியில் நடத்தவிருந்த நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு இரண்டாவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருச்சி : நீட் தேர்வை எதிர்த்து செப்டர் 19ல் திருச்சி உழவர் சந்தையில் கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரிய டிடிவி தினகரனுக்கு இரண்டாவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டிடிவி. தினகரனும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செப்டம்பர் 12ல் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்தார். இந்நிலையில் திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், 16ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும்' என, தினகரன் அறிவித்திருந்தார். கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, தினகரன் அணியின் அமைப்புச் செயலர் மனோகரன், போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் கடிதம் கொடுத்தார்.
16ம் தேதி, உழவர் சந்தை மைதானத்தில், தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில், இரண்டு நாட்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளதால், கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் செப்டம்பர் 19ல் கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரி திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது முறையாக இன்றும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.