பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதேபோல தேனி மாவட்ட பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களது வேண்டுகோளினை ஏற்று, பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக 1.6.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்காலில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியாறு அணை திறப்பு
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டு கோளினை ஏற்று, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து 1.6.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடி நாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.