கணவரின் கள்ளக்காதல்.. பரிதவித்த மனைவி.. பறிபோனது சிறுமியின் உயிர்.. பெருந்துறையில் பரிதாபம்!
சிறுமி கொலை செய்யப்பட்டதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பெருந்துறை: விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டு பெண் கொலையை செய்தது அம்பலமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை அடுத்த, கருமாண்டிச்செல்லிபாளையம், அங்கப்பா வீதியில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதியின் மகள் கனி, 7. இவர், நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தடியில், உடலில் காயங்களுடன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறுமியின் உடற்கூறாய்வு நடந்தது. இதில், சிறுமி, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
சிறுமியின் அக்கம்பக்கத்தினர் வீடுகளில், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்ற பெண், சிறுமியை தோளில் தூக்கிச் சென்றதைப் பார்த்தாகத் தெரிவித்தார். இதையடுத்து, வனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியைக் கொலை செய்ததை வனிதா ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து, பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தெரிவித்ததாவது: குன்னூர், தூளூர்மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா, 33. இவர், 2009ல், வேறு சமூகத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், 35 என்பவரைக் காதலித்து, கலப்புத் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். ஏழு வருடங்களுக்கு முன், கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதி உடன் நட்பாகப் பழகி உள்ளனர்.
கனகாவின் கணவர் சண்முகநாதன் குடிபோதைக்கு அடிமையாகி, குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். அப்போது, வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும், கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் மகள் கனியைத் தன் மகள் போல் பாவித்து, கமலக்கண்ணன் செலவு செய்து வந்துள்ளார். இதனால், கமலக்கண்ணனுக்கும், அவர் மனைவி வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சிறுமி உயிருடன் இருந்தால் தனக்கும், தன் மகனுக்கும் பிரச்சனை ஏற்படும் எனக் கருதிய வனிதா, சிறுமியைக் கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று முன்தினம், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கனியை, திண்பண்டங்கள் தருவதாகக் கூறி வீட்டிற்குச் கூட்டிச் சென்று, வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின், சிறுமியின் உடலைத் தோளில் தூக்கிச் சென்று, மரத்தடியில் போட்டு வந்துள்ளார். உடற்கூறாய்வு அறிக்கை, நேரில் பார்த்த சாட்சி, வனிதாவின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில், வனிதாவைக் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெருந்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் வனிதாவை ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.