பெருந்துறை அருகே.. லாரி மீது கார் மோதி கணவர், மனைவி பலி.. கதறித் துடித்த மகன்!
கார்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெருந்துறை: பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உடல்நசுங்கி உயிரிழந்தனர். தன் கண்முன்னாலேயே பெற்றோர் உயிரிழந்ததை கண்ட மகன் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சென்னையை சேர்ந்தவர்கள் வின்சென்ட் புஷ்பா தம்பதி. இவர்களுடைய மகன் ரிச்சர்டு வயது 30. இவருக்கு சமீபத்தில்தான் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் சில நாட்களாக ஏஞ்சல் தனது பெற்றோருடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், சரவணம்பட்டியில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரிச்சர்டு தனது பெற்றோரை சென்னையிலிருந்து காரில் அழைத்து வந்துள்ளார். காரை ரிச்சர்டுதான் ஓட்டியுள்ளார். இன்று காலை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சோளிபாளையம் பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் இடதுபுறமாக ஒரு லாரி நின்றது.
திடீரென நிலைதடுமாறி கார் ஓடத் தொடங்கியது. பின்னல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பாகத்தினுள் புகுந்தது. இதனால் காரின் முன்னால் உட்கார்ந்திருந்த வின்சென்ட், பின் சீட்டில் இருந்த புஷ்பாவும் அதே இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்தனர்,
ரிச்சர்டு படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், காரின் பாகத்தை வெட்டி எடுத்து இடிபாட்டில் சிக்கி கிடந்த தம்பதியின் உடல்களை மீட்டனர். அப்போது படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரிச்சர்டு, பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி கதறி அழுதார். இதையடுத்து போலீசார் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.