ஜல்லிக்கட்டு: நடிகர் சூர்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது 'பீட்டா' அமைப்பு
படங்களின் விளம்பரத்துக்காக ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக பீட்டா கூறியிருந்தது. இதற்கு நடிகர் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளது பீட்டா அமைப்பு.
சென்னை: தம்முடைய பட விளம்பரத்துக்காக ஆதரவு தருகிறார் நடிகர் சூர்யா என பீட்டா அமைப்பினர் திமிராக பேசியிருந்தனர். இந்த பேச்சுக்கு பீட்டா அமைப்பு சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வந்தார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், தன்னுடைய பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக கொழுப்பாக பேசியிருந்தார்.
இதற்கு சூர்யா தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சூர்யா ரசிகர்களும் கொந்தளித்தனர். இதனிடையே ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதுரை, நெல்லையில் தம்முடைய சி3 பட விளம்பர நிகழ்ச்சிகளை சூர்யா ரத்து செய்திருந்தார்.
மேலும், பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகர் சூர்யா குறித்து விமர்சித்த பீட்டா அமைப்பு அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா வெளியிட்டுள்ளார்.