கொம்பன் இறந்த சோகத்தில் இருக்கும் விஜயபாஸ்கர்... ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு கேட்டு பீட்டா சேட்டை!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை ஜல்லிக்கட்டில் இறந்ததை சாக்காக வைத்து ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு பீட்டா கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video
சென்னை : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை இறந்ததை சென்டிமென்ட்டாக வைத்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் பீட்டா கடிதம் எழுதியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த தென்னலூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை பங்கேற்றது. வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்ட காளை ஆர்ப்பரித்து ஓடி வந்த போது வாடிவாசலிலேயே முட்டி மயங்கி கிழே விழுந்து இறந்தது.
பரிசுகளை வாங்கித் தந்து விஜயபாஸ்கரை பெருமைப்படுத்திய கொம்பன் காளை, அவர்கள் வீட்டில் ஒரு நபர் போல வளர்க்கப்பட்டுள்ளது. கொம்பன் இறந்ததால் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
அமைச்சருக்கு கடிதம்
இந்நிலையில் இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது பீட்டா. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பீட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
சென்டிமெண்ட்டாக அமைச்சருக்கு கடிதம்
அதில் எந்த ஒரு தகப்பனும் தன்னுடைய பிள்ளைக்கு ஆபத்து என்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். அது மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் ஒரே நீதி தான். ஜல்லிக்கட்டில் உங்களது காளை இறந்ததை அறிந்தோம், இது போன்று மற்ற காளைகளுக்கு காயமோ, இறப்போ ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
அமைச்சர் ஆதரவளிக்க கடிதம்
எனவே ஜல்லிக்கட்டு தடைக்கு உங்களது ஆதரவு வேண்டும் என்று பீட்டா கேட்டுக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டில் பங்கேற்றவர்கள் காளைகளின் வாலை முறுக்குவது, கடிப்பது, கூர்மையான ஆயுதங்களால் அவற்றை குத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
காளைகள் துன்புறுத்தப்படுகின்றன
காளைகளுக்கு முறையான நிழல்,உணவு மற்றும் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. சில இடங்களில் அனுமதியின்றியும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. இதில் காளைகளுக்கு காயம், சில நேரங்களில் கொல்லப்பட்டும் இருக்கிறது, ஆனால் அது எதுவுமே வெளிஉலகிற்கு தெரியவில்லை என்றும் பீட்டா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.