காங்கிரசில் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தென்காசி தொகுதியில் போட்டி?
சென்னை: தமிழ் மாநில காங்கிரசில் இருந்து காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ள பீட்டர் அல்போன்சுக்கு, அக்கட்சி தென்காசி தொகுதியில் சீட் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் எம்.எல்.ஏவான பீட்டர் அல்போன்ஸ், மீண்டும் தனது தாய் கட்சியான காங்கிரசில் சென்று இணைந்து கொண்டார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.
போட்டியிட சீட்
இந்த சூழ்நிலையில், பீட்டர் அல்போன்சுக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தெரிகிறது. த.மா.காவிலிருந்து மீண்டும் காங்கிரசுக்கு வந்தால், போட்டியிட சீட் வழங்கப்படும் என்ற உறுதியை பெற்றபிறகே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறும் அறிவிப்பை பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் எம்.எல்.ஏ
பீட்டர் அல்போன்ஸ் 1989 மற்றும் 1991ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். 2006ம் பொதுத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் வென்றுள்ளார். இவை இரண்டுமே நெல்லை மாவட்டத்து தொகுதிகளாகும்.
தென்காசிக்கு வாய்ப்பு
தற்போதைய தேர்தலில் காங்கிரசுக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்படவில்லை. எனவே பீட்டர் அல்போன்ஸ் தென்காசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது. பட்டியலை மாறுதல் செய்து கடையநல்லூரை காங்கிரஸ் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
கடையநல்லூர் இல்லை
காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவனும், இதை உறுதி செய்யும்விதமாக, காங்கிரஸ் பட்டியலில் எந்த மாறுபாடும் இருக்காது என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
சரத்குமார் எதிர்ப்பலை
தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவரது செயல்பாடு திருப்தியளிக்காததால் தொகுதி மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இதனால்தான், சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். எனவே அந்த எதிர்ப்பலை பீட்டர் அல்போன்சுக்கு உதவும் என்பது காங்கிரஸ் திட்டமாக உள்ளது.