ஐயா, எங்க ஊர் குளத்தை காணவில்லை, கண்டுபிடித்து தாங்க: புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டை: விராமலை அருகே உள்ள கொடும்பாளூரில் இருந்த குளத்தை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் காந்தியவாதி ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கும் கொடும்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர் என். செல்வராஜ்(70). காந்தியவாதி. சைக்கிளில் ஒலிப்பெருக்கி மூலம் பூரண மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
முன்னதாக தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கொடும்பாளூரில் 100 ஆண்டுகள் பழமையான சத்திரக்குளத்தைக் காணவில்லை. அதைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அக்டோபர் 11-ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செல்வராஜ் கூறுகையில்,
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து குளத்தை மீட்குமாறு பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி வைத்தேன். அந்த மனு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிப்ரவரி 26ம் தேதி எனக்கு தகவல் வந்தது. ஆனால் அதன் பிறகு அது குறித்து ஒரு நடவடிக்கையும் இல்லை என்றார்.