வாக்கி-டாக்கி வாங்கியதில் பலகோடி முறைகேடு.. தமிழக டிஜிபி மீது நடவடிக்கை.. ஹைகோர்ட்டில் மனு
காவல்துறைக்கு வாக்கி -டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மதுரை: தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017-18 ஆம் ஆண்டில் 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் 83.45 கோடி செலவு செய்து வெறும் 4000 வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் செந்தில் தெரிவித்துள்ளார்.
48 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வாக்கி-டாக்கியை 2 லட்சம் ரூபாய் கொடுத்து காவல்துறை வாங்கி மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் செந்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.