சுங்க சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு மட்டும் சலுகை வழங்குவதை எதிர்த்து வழக்கு
சென்னை: சுங்க சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுங்க சவாடிகளில் பாஸ்டேக் மூலம் இருமார்க்க பயணத்திற்கு கட்டணம் செலுத்தும் போது, கட்டணச் சலுகை வழங்கி, கடந்த ஜனவரி15 ம் தேதி இந்திய தேசிய நெடுங்சாலைகள் ஆணையம் சுற்றறிக்கை பிறப்பித்தது.
சுங்க சாவடிகளில் கட்டணத்தை பணமாக செலுத்தி செல்பவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டதாக கூறி, ஈரோட்டை சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஏற்கனவே பாஸ்டேக் நடைமுறை தொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதால் மக்கள், சுங்க சாவடிகளில் பணம் செலுத்தி செல்வதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில், பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவது பாரபட்சமானது என்பதால், நெடுஞ்சாலை துறை சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையை ரத்து செய்து, பணம் கொடுத்து பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் சுற்றறிக்கை அரசியல் சாசனம் அளிக்கும் சம உரிமைக்கு எதிராக உள்ளதாக வாதிட்டார்.
இதையடுத்து, குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை வழங்குவதை போல, தங்களுக்கு வழங்க வேண்டும் என கோருவதற்கு உரிமையில்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.