மரணத்தில் மர்மம்... சசிபெருமாள் மகன் ஹைகோர்ட்டில் வழக்கு - தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மகன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி வரும் 13ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் கடந்த வாரம் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறிப் போராடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்தார்.
சசிபெருமாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்றும், உடல் நலப் பாதிப்பினால் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என்றும் வேறுபட்ட தகவல்கள் கூறுகின்றன. ஆனால், செல்போன் கோபுரத்தில் இருந்து சசிபெருமாளை கீழே இறக்கியபோது அவரது சட்டையில் ரத்தம் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. பூரண மதுவிலக்கு குறித்து உறுதி அளித்தால் மட்டுமே சசிபெருமாளின் உடலைப் பெறுவோம் எனக் கூறி அவரது குடும்பத்தார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் தந்தையின் சாவில் மர்மம் உள்ளது. அவரது உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் திருஞானசம்பந்தம் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் இந்த மனுவுக்கு தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றுஉத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.