ஐய்யப்பன் சிலையை மீட்டுக் கொடுங்கள் - கரூரில் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
கரூர்: கரூரில் ஐய்யப்பன் சிலை ஒன்று மாயமான விவகாரத்தில் சிலையை மீட்டுத்தரக் கோரி கரூர் ஆட்சியரிடம் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.
இதில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் சிலர் மனு கொடுத்து உள்ளனர். அதில், கருப்பத்தூர் அருகே உள்ள வேங்காம்பட்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஐய்யப்பன் சிலை கடந்த 6.1.2015 அன்று காணாமல் போனது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு வயல்காட்டில் ஒரு சிலை கிடப்பதாக வந்த தகவலின்படி அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன ஐய்யப்பன் சிலை என்று தெரிந்தது.
அதை வருவாய்த்துறையினர் மீட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து உள்ளனர். இந்த சிலையை மீட்டு கொண்டு வர பல முயற்சிகள் எடுத்தோம். ஆனால் முடியவில்லை. எனவே ஐய்யப்பன் சிலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.