ஐ.டி நிறுவன பெண்கள் பாதுகாப்பு: புதிய சட்டம் கோரி பொது நல மனு
கடந்த மாதம் காணாமல் போன டிசிஎஸ் பெண் என்ஜினியர் உடல் அழுகிய நிலையில் அவரது அலுவலகத்திற்கு அருகிலேயே கண்டெடுக்கப் பட்டார். அவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.டி நிறுவனங்களில் பணி புரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சட்டம் இயற்றுமாறு சென்னை ஹைகோர்ட்டில், கொரட்டூரை சேர்ந்தவர் வக்கீல் கே.டி.எஸ்.சிவகுமார் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப் பட்டிருந்ததாவது:-
விசாகா வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், பணியாற்றும் இடங்களில் பெண் ஊழியர்கள் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பணி முடிந்து வீடு செல்லும் வரை பாதுகாப்பு வழங்கும் விதமாக அந்த சட்டம் இல்லை.
அண்மையில் சென்னை சிறுதாவூர் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்த உமா மகேஸ்வரி என்ற பெண்ணை மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் கற்பழித்து கொலை செய்துள்ளனர்.
ஐ.டி. நிறுவனங்கள், பி.பி.ஓ.க்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இரவு பணி என்பது தவிர்க்க முடியாதது. எனவே இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக விரிவான சட்டத்தை இயற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என இவ்வாறு தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், ‘சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக சட்டசபைக்கு உத்தரவிட இந்த கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. எனவே, மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை மாற்றி புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள், வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்' என உத்தரவிட்டனர்.