இரோம் ஷர்மிளாவினால் கொடைக்கானல் போராட்டகளமாகிவிடும்- திருமணத்திற்கு எதிர்ப்பவர் விளக்கம்
பெண் போராளி இரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொடைக்கானல் : இரோம் சர்மிளா கொடைக்கானலில் தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என்று அவரது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மகேந்திரன் என்பவர் கூறியுள்ளார்.
இரோம் ஷர்மிளா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளரிடம் மனு அளித்த மகேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்தியவர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா. கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஷர்மிளா, பின்னர் தனிக்கட்சித் தொடங்கி மாநில சட்டசபை தேர்தலில் முதல்வரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அவருக்கு 90 வாக்குகளே கிடைத்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஷர்மிளா கொடைக்கானலில் தங்கப் போவதாகக் கூறினார்.
தனது காதலரான லண்டனைச் சேர்ந்த தேஸ்மன் கொட்டின்கோவை திருமணம் செய்ய ஷர்மிளா முடிவு செய்தார். இருவரும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பம் அளித்தனர்.
இரோம் சர்மிளா திருமணத்துக்கு பிறகு கொடைக்கானலில் தங்கி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடப் போவதாகக் கூறி இருந்தார். இதனால் இவர்கள் திருமணத்துக்கு அனுமதிக்க கூடாது என்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் ராஜேசிடம் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதற்கான ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி சார்பதிவாளர் ராஜேஸ் முன் மகேந்திரன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இரோம் சர்மிளா அவரது காதலரை திருமணம் செய்து இங்கேயே தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என கூறினார். அதற்கான ஆதாரங்களையும் சார்பதிவாளரிடம் அளித்தார். இதனை பெற்றுக் கொண்ட சார் பதிவாளர் மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.