வேலூர்: இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு... பதற்றம்
வேலூர்: ஆற்காட்டில் இந்து முன்னணி நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு ராஜாகோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோ, 36. நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். சினிமா தியேட்டர்களில் உள்ள கேன்டீன்களில் பப்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு சினிமா தியேட்டரில் பப்ஸ் சப்ளை செய்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு வந்தார்.
வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். அப்போது அங்கு ஆட்டோவின் பின்புறம் மறைந்திருந்த ஒரு நபர், பெட்ரேல் நிரப்பியை பிளாஸ்டிக் கவரை இளங்கோ மீது வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சல் போட்டுள்ளார். அப்போது சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நபரும் பெட்ரோல் நிரப்பிய மற்றொரு பிளாஸ்டிக் கவரை அவர் மீது வீசியுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட இளங்கோ, கூச்சலிட்டபடி அவர்களை பிடிக்க ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம ஆசாமிகள், இளங்ேகா மீது மீண்டும் ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர் மீது படவில்லை.
சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதை பார்த்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் இளங்கோ வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இளங்கோ ஆற்காடு டவுன்போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இளங்கோவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இளங்கோவிற்கு பூர்ணிமா , 27 என்ற மனைவியும், ஜெயஸ்ரீ, 2 என்ற மகளும் உள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இளங்கோவின் வீடு உள்ள பகுதியிலும், நகரில் முக்கிய பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வருகின்றன. இளங்கோ மீது முன் விரோதத்தின் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா, என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.