குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி.. தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.. திருமாவளவன் கண்டனம்
சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது; கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசும் போது பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, 1971ல் நடந்த சம்பவத்தை மீண்டும் மறுபிரசுரம் செய்யப்போவதாக கூறியிருந்தார். இப்படி தொடர்ந்து சர்ச்சைகள் நிலவியது. இந்த சூழலில் சென்னை மைலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்றுள்ளார்கள். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மைலாப்பூர் போலீசார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தமிழ், ஜனா, சசி, பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது; கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருப்பது கருத்து மோதலின் வெளிப்பாடு; ஸ்டாலின் தெரிவித்த கருத்தில் எதுவும் கூறுவதற்கு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.