தினகரன் வீடு மீது வீச முயன்ற பெட்ரோல் குண்டு காரிலேயே வெடித்தது.. புல்லட் பரிமளத்துக்கு வலை
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றபோது வீச முயன்றவர் காரிலேயே குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை அடையாற்றில் டிடிவி தினகரன் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் இவரது வீட்டு அருகே நின்றிருந்த இன்னோவா கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் கார் கண்ணாடிகள் தூள் தூளாகின.
இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர் டார்வின் மற்றும் அந்த ஏரியாவில் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், சேதமடைந்த கார், காஞ்சிபுரத்தை சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இவரை கட்சி பொறுப்பில் இருந்து சமீபத்தில் தினகரன் நீக்கியிருந்தார். அந்த பதவிக்கு உமா மகேஷ்வரி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தினகரன் வீட்டு அருகே புல்லட் பரிமளம் காரில் குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் வீட்டு மீது குண்டு எறிய முற்பட்டபோது, காரிலேயே குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே புல்லட் பரிமளம் கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். புல்லட் பரிமளத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.