கோவை: பாஜக நிர்வாகி, இந்து முன்னணி பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
கோவையில் அதிகாலையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: கோவையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இரு இடங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் சி.ஆர்.நந்தகுமார். இவரது வீடு பீளமேடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில்,இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரிற்கு மர்ம நபர்கள் இன்று தீ வைத்து சென்றனர்.
இதில் காரின் முன் பகுதி எரிந்து சேதமானது. சத்தம் கேட்டு வெளியில் வந்த நந்தகுமார் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்த போது கார் எரிந்து கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் காரின் மீது எரிபொருளை ஊற்றி பற்றவைத்துள்ளனர் எனவும் திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா,துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பிற்கு எதிர்வினையாக காருக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் உமாபதி இந்து முன்னணி நிர்வாகி. பைனான்சியரான இவரது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனம் மற்றும் மகேந்திரா கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இதில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் எரிந்து சேதம் அடைந்தது. உடனடியாக வீட்டில் இருந்த தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த உமாபதி சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் துறையில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உமாபதி வீட்டின் அருகில் பா.ஜ.க பிரமுகர் வீடு இருப்பதால், அதை குறிவைத்து வந்த நபர்கள் தவறுதலாக உமாபதி வீட்டில் உள்ள வாகனங்கள் மீது தீ வைத்து சென்று இருக்கலாம் என கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த முறை பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.இது தொடர்பாக தபெதிக அமைப்பினை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து இருப்பதால், திராவிடர் இயக்கத்தினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.