"வெடித்து" விளையாடும் சேலம் திமுகவினர்.. மாஜி எம்.பி. செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
சேலம் திமுகவில் உட்கட்சி மோதலின் உச்சகட்டமாக செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
சேலம்: திமுக உட்கட்சி மோதலின் உச்சகட்டமாக சேலத்தில் முன்னாள் எம்.பி. செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் திமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு நிற்கிறது. மறைந்த வீரபாண்டியார் மகன் ராஜாவுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் தரவில்லை. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்குதான் திமுக தலைமை முக்கியத்துவம் அளித்தது.
தற்போது வீரபாண்டி ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் கோஷ்டிகளிடையே உக்கிர மோதல் நடைபெற்று வருகிறது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. செல்வகணபதியை முன்னிறுத்தும் பணிகளை ராஜா செய்து வருகிறார்.
இந்நிலையில் திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இருதரப்பும் அரிவாளால் வெட்டிக் கொண்ட பயங்கரம் நேற்று காலை நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதில் செல்வகணபதி வீட்டில் இருந்த கார், இருசக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தன. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களே இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பது செல்வகணபதி தரப்பின் குற்றச்சாட்டு.