இலங்கை அகதிகள் முகாம்மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீச்சு.. அதிரடிப்படையினர் குவிப்பு
கோவை மாவட்டம் பூளுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் மீது இந்துமுன்னணி அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பாதுகாப்புக்காக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இது குறித்து போலீசார் தரப்பில், " பூளுவப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை கைப்பந்து விளையாடிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாகச் சென்ற காளப்பாளையத்தை சேர்ந்த சிவா என்பவர் இளைஞர்களின் தகராறை விலக்கி, அவர்களைக் கண்டித்துள்ளார்.
இதில் சிவாவிற்கும் அவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிவாவுக்கு ஆதி விழுந்துள்ளது. அதனைக் கேள்விப்பட்ட சிவாவின் மகன் சுரேந்திரராஜா கொந்தளித்துள்ளார். உடனே அவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் மற்றும் சிலருடன் இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று, சிவாவை தாக்கியதைப் பற்றி விசாரித்துள்ளார்.
இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அகதிகள் முகாம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இத்தகராறில் காயமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரமேஷ் குமாரையும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுமனையும் கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் ஆலாந்துறை காவல்துறையினர் இருதரப்பைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். முகாமைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.