காரைக்குடி அருகே ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஆர்எஸ்எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
காரைக்குடி: காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் பாஸ்கரன் 37. இவர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராக உள்ளார். அத்துடன், தனது வீட்டிலேயே முட வைத்திய சாலை ஒன்றினையும் நடத்தி வருகிறார்.
பாஸ்கரன் சொந்த விஷயம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்ததுடன், வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் பயங்கர சத்தத்துடன் வெடித்து வாசல் கதவு உட்பட சில பொருட்கள் சேதமடைந்தன. அத்துடன் அங்கிருந்த துணிகளும் தீப்பற்றி எரிந்தன. வெடிசத்தம் கேட்டு எழுந்த பாஸ்கரனின் மனைவி வெளியே வந்து பார்த்தபோது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குன்றக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனுமா என்பன குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.