வங்கியைப் பூட்டி பெட்ரோல் குண்டு வீச்சு.. இன்ஸ்பெக்டர் காயம்... கோவில்பட்டியில் பயங்கரம்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வங்கியை வெளியில் பூட்டி வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே இயங்கி வருகிறது பாரத ஸ்டேட் வங்கியின் கிளை. மாரிமுத்து என்பவர் திடீரென இன்று காலை வங்கியின் அருகே வந்தார். பின்னர், திடீரென வங்கியை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, ஏற்கனவே, தயார் நிலையில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை வங்கியின் உள்ளே வீசியுள்ளார்.
மேலும், கையில் இருந்த கத்தியை காட்டி அந்த வங்கியின் ஊழியர்களையும் மிரட்டியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் மாரிமுத்து கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, பெட்ரோல் குண்டு வீச்சின் போது அங்கிருந்த போலீசார் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில் கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓடும் பேருந்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோவில் பட்டியில் அடுத்தடுத்து நடந்து வரும் துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.