ஈரோட்டில் வணிகர் சங்கத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
ஈரோடு வணிகர் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ஈரோடு: ஈரோட்டில் வணிகர் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரோடு ஈபிபி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட துணைத் தலைவராகவும் கொங்கலம்மன் கோயில் வீதி வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் செல்வத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன் பகுதி பால்கனியில் தீப்பற்றி எரிந்ததைக்கண்ட அருகில் வசிப்பவர்கள் தீயை அணைத்தனர். சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாட்டில் துண்டுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பெட்டோல் குண்டு வீசிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.வணிகர் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.