சொத்துத்தகராறு.. தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது
தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு புகார் அளித்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த திருவேற்காடு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பரமானந்தம்(49). இவர் திருவள்ளூர் மாவட்ட பாஜகவில் எஸ்சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகிக்கிறார். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி வசந்தா,40. தம்பதிக்கு ஹரீஸ்(15), ஸ்டாலின்(3) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் முன்தினம் இரவு பரமானந்தம் தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் முன்பக்கத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீட்டிற்குள் வீசியதாக பரமானந்தம் திருவேற்காடு போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரமானந்தம் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்னையை திசை திருப்ப தன் வீட்டில் தானே குண்டு வீசியது தெரியவந்தது.
பின்னர் பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பரமானந்தன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.