போற போக்கை பார்த்தா.. விறகு கட்டையைத்தான் கையில் எடுக்க வேண்டும் போல...!
பெட்ரோல் - டீசல் வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Recommended Video
சென்னை: எப்போதான் நமக்கு விடியும்? என்றே தெரியவில்லையே....!
பெட்ரோல், டீசல் விலையை இப்படி உயர்த்திட்டே வர்றீங்களே... இது சரியா என்று கேட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது, ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிகிறது... நாங்கள் என்ன செய்யட்டும் என்கிறது மத்திய அரசு.
[மதுரையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு.. காட்டாற்று வெள்ளம்!]
விழி பிதுங்கினான் சாமான்யன்
எப்பதான் இந்த விலை குறையுமோ என்று பார்த்தால் 2 மாதமாக விலை குறையவே இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர உயர, விலைவாசியும் உயர்ந்தது. பஸ்ஸிலிருந்து ஷேர் ஆட்டோ வரை போக்குவரத்து கட்டணங்களும் உயர்ந்து கொண்டே போனது. கிட்டத்தட்ட பாஜகவை எல்லா கட்சிகளும் போராட்டங்களையும், கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நாடு முழுவதும் நடத்தி முடித்தாயிற்று. ம்ஹூம்... அசரலையே மத்திய அரசு!! விழி பிதுங்கி நின்றான் சாமான்யன்!!
விலை குறைந்தது
2 நாட்களுக்கு முன்புதான் பெட்ரோல்-டீசல் மீதான கலால்வரி ரூ.1.50 குறைத்து மத்திய அரசாங்கம் உத்தரவு போட்டது. எண்ணெய் கம்பெனிகளும் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கவேண்டும் என வலியுறுத்தியது. இதனை ஏற்று, மத்திய அரசு சார்பிலும், எண்ணெய் கம்பெனிகள் சார்பிலும் லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு என தகவல் வெளியானது. மத்திய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உள்பட 12 மாநிலங்களில் லிட்டருக்கு ரூ.2.50 மதிப்புக்கூட்டுவரியும் குறைக்கப்பட்டது.
மதிப்பு கூட்டு வரி
ஆனால் முழு சந்தோஷம் யாருக்குமே போய்ச் சேரவில்லை. கலால் வரியை குறைத்தால்தான் இந்த விலை குறைப்பை யாராலும் அனுபவிக்க முடியும்... பயன் பெற முடியும்... கலால் வரி என்றாலே மத்திய அரசு ஜகா வாங்க ஆரம்பித்து விடும் என்பதுதான் இயல்பு. ஆனால் வேறு வழியில்லை... கலால் வரியை மத்திய அரசும், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மாநில அரசும் இன்னும் கொஞ்சமாவது குறைக்க முன் வரவேண்டும்.
தேர்தல் அஸ்திரமா?
அல்லது அதற்கு பரிசீலனையாவது செய்ய வேண்டும். குறைப்பது போல குறைத்துவிட்டு, மற்றொரு பொருளின் மீது விலையையோ, வரியையோ கூட்டுவது அரசியல் ராஜதந்திரம் என்பதும், வரப்போகிற தேர்தலுக்கான ஒரு அஸ்திரம் என்பதையும் படிக்காத மக்கள்கூட அறியாமல் இல்லை.
கேஸ் விலை உயர்வு
அதற்குள் கேஸ் விலையில் கை வைத்து விடுகிறது. மானியமும் கொடுத்துவிட்டு, விலையும் ஏற்றிவிடுவது எந்த வகையில் நியாயமோ? இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதைவிட, இதற்கு கேஸ் மானியத்தையே ரத்து செய்துவிடலாம் போல ஆகிவிடுகிறது. அப்படி ரத்து செய்துவிட்டாலும் ஆச்சயரிப்படுவதற்கு இல்லை.
விறகு கட்டைதானா?
இப்படி பெட்ரோல், டீசல், கேஸ் என்று விலை ஏற்றி ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை இன்னும் ஓட்டாண்டியாக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட்டால் நல்லது. இல்லையென்றால், பெட்ரோல் டீசலுக்கு வழியில்லாமல் சைக்கிள், மாட்டு வண்டி என்றும் கேஸ் வாங்க வழியில்லாமல் விறகு கட்டையையும் கையிலெடுக்கும் நிலைதான் வரும்!!