பெட்ரோல்-டீசல் விலை உயர்வு விண்ணை தொட்டது - ஓசூர், கரூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.54
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது. ஓசூர் மற்றும் கரூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.54க்கும், டீசல் விலை 73.12க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்று உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.29, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.37 காசுகள் என விலை நிர்ணயம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக உள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,பெட்ரோல் விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.37 காசுகளாகவும் உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தன.
தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரியாக 18.46 சதவீதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.47 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டன. கோவையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 77.29 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 69.37 காசுகளுக்கும் விற்கப்பட்டன.
திருவள்ளூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 77.29 காசுகளும், டீசல் 69.37 காசுகளும் விற்கப்பட்டு வருகின்றன. ஓசூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.54க்கும், டீசல் விலை 73.12க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.77.29 காசுகளாகவும் டீசல் 69.37 காசுகளாகவும் உள்ளன. கரூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.54 ஆகவும், டீசல் விலை ரூ.73.12 ஆகவும் காணப்படுகிறது.
பாஜகவின் இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் அதிகபட்சமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் இது கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியைக் குறைத்து விட்டதால், இந்தக் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 74.06 டாலர்களுக்கு அதாவது ரூ.4,903.28க்கு விற்பனையாகிறது. இது கடந்த 2013ம் ஆண்டு 100 டாலர்களாக(ரூ.6,606) இருந்தது குறிப்பிடத்தக்கது.