ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை.. இதுக்கு எப்போதுதான் தீர்வு?
பெட்ரோல் டீசல் விலை விலை இன்று காலை முதல் உயர்ந்துள்ளது.
சென்னை: கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி உயர்த்தி... இன்று வரலாறு காணாத அளவுக்கு வந்து உச்சத்தை தொட்டு நிற்கிறது பெட்ரோல் விலை.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாசத்துக்கு 2 முறை மாற்றியமைத்துக் கொண்டு வந்தன. 15 வருஷமாக நடைமுறையில் இருந்த ஒரு விஷயத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது.
அடிக்கடி விலை ஏற்றம்
தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் என்று புதிய முறை அமலுக்கு வந்தது. இதில்தான் பிரச்சனையே ஏற்பட்டது. இந்த நடைமுறையில் எரிபொருட்கள் விலை இறங்கியது. பொதுமக்களும், பரவாயில்லையே... விலை கொஞசம் இறங்கியிருக்கிறதே என்று நிம்மதி மூச்சு விடுவதற்குள் திடீரென எரிபொருளில் விலை ஏற்றம் இருக்கும்.
தொடர்ந்து பாதிப்பு
இப்படி விலையை கொஞ்சமாக குறைத்துவிட்டு, பிறகு நடுராத்திரியில் விலையை பெருமளவு உயர்த்தி விடுவதே நடைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் அளவுக்கு அதிகமான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ரூ.81.92 ஆக உயர்வு
இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.81.92ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.77ஆகவும் உள்ளன.
அதிக வரிகள் காரணமா?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்து கொண்டே வருவதன் காரணம்தான் என்னவென்று புரியவில்லை. ஒருவேளை அதிக வரிகள் போடுவதால்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறதா?
ஆர்டிஐ தகவல்
ஆனால் நம்மை சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் குறைவான விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனையாகிறதே எப்படி? 15 நாடுகளுக்கு இந்தியா வெறும் 34 ரூபாயில் பெட்ரோலும், 29 ரூபாயுக்கு டீசலும் ஏற்றுமதி செய்வதாக நேற்று ஆர்.டி.ஐ., மூலம் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் நமக்கு தான் மத்திய, மாநில அரசுகள் வரி விதித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82 ரூபாயாக மாற்றி தலையில் தீயை வைத்து வருகின்றனர்.
பாதிப்பது சாமான்யன்தான்
எனவே பிரச்சனை எண்ணெய் நிறுவனங்கள் மீது கிடையாது. முழுமுதற் காரணம் மத்திய, மாநில அரசுகளைதான் சேரும். இப்படி பெட்ரோல் விலையை உயர்த்தி கொண்டே போனால், அதன் தாக்கம் விலைவாசியில் வந்து நிற்கும். இதில் பாதிக்கப்பட போவது சத்தியமாக சாமான்யன்தான்! எனவே அனைத்து கட்சியினரும் இனியும் இந்த பெட்ரோல் விலையை உயர்த்தவிடாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் நெருக்கடி தர வேண்டும் என்பது அப்பாவி மக்களின் கருத்தாக உள்ளது.