பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும்: விக்கிரமராஜா
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கோவை : பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சரியான வழியாக இருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் தென்னிந்திய வர்த்தக சபை கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.
அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில், வணிக் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முக்கிய நிறைவேற்றப்பட்டன.
ஜி.எஸ்.டி வரி விலக்கு
அதில், வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் எல்லா உதவிகளையும் செய்வது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஜி எஸ் டி யிலிருந்து முழு வரி விலக்கு அளிக்க வேண்டுவது,பெட்ரோல்- டீசல் உள்ளிட்டவற்றை ஜி எஸ் டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிகாரிகளின் மிரட்டல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரம்ராஜா, அதிகாரிகள் பலர் வணிகர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருவதாகவும், சிறு வணிகர்களை பல இடங்களில் உரிமம்பெற மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் வணிகர்களுக்கு அதிக நெருக்கடிகள் நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை
தொடர்ந்து விலைவாசி அதிகரித்து வருவதற்கு வியாபாரிகள் காரணமில்லை என்றும், அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை தான் இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆறுகளை சீர் செய்ய வேண்டும்
மேலும், தமிழக அரசியலுக்கு புதிதாக வரும் யாராக இருந்தாலும், ஆறுகளைச் சீர் செய்யவும், நதி நீர் விவகாரத்தில் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்வதே எதிர்காலத் தலைமுறையினருக்கு நன்மை அளிக்கும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.