வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி: 13ம் தேதி வரை கார்டு மூலம் பெட்ரோல் போடலாம்!
சென்னை: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்பது இல்லை என்ற முடிவை பெட்ரோல் பங்குகள் ஜனவரி 13ம் தேதி வரை தள்ளிப் போட்டுள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பணத் தட்டுப்பாடாக உள்ளது. மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்கப் போவது இல்லை என்று பெட்ரோல் பங்குகள் அறிவித்தன. இதனால் வாகன ஓட்டிகளும், லாரி டிரைவர்களும் கவலை அடைந்தனர்.
இந்த சூழலில் கார்டுகளை ஏற்பது இல்லை என்ற முடிவை ஜனவரி 13ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளன பெட்ரோல் பங்குகள். இது குறித்து அனைத்து இந்தி பெட்ரோலியம் டீலர்கள் அசோசியேஷன் நிதி மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ஹெச்.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கிகள் அனைத்து கிரெடிட் கார்டு பண பரிமாற்றத்திற்கும் ஜனவரி 9ம் தேதி முதல் 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், டெபிட் கார்டுகளுக்கு 0.25 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விதிப்பை தள்ளிப் போடுவது குறித்து வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பெட்ரோலிய அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்க மாட்டோம் என்று பெட்ரோல் பங்குகள் அறிவித்ததை அடுத்த 1 சதவீத கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகள் 13ம் தேதி வரை தள்ளிப் போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.