காவிரி : ஏப்ரல் 5ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கவில்லை : பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் திடீர் ‘பல்டி’
ஏப்ரல் 5ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ம் தேதி நடக்கவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததை பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு மதிமுக, விசிக, பாமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக நேற்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் ஏப்ரல் 5ம் தேதி மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று காலை வெளியான அறிக்கையில், ஏப்ரல் 5ம் தேதி நடக்கவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்திற்கு மட்டுமே ஆதரவு என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.