பெட்ரோலுக்கு டோக்கன்... செல்போன் ரீசார்ஜ்... செக் வைக்கும் லக்கானி!
சென்னை: வாக்காளர்களின் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். டோக்கன் பெற்றுக் கொண்டு, வாகனங்களுக்கு மொத்தமாக எரிபொருள் நிரப்ப, பெட்ரோல் பங்க்குகளுக்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு நடக்கிறது.
கண்களில் விளக்கெண்ணைய் ஊற்றிக்கொண்டு விடிய விடிய தூங்காமல் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தாலும், அரசியல் கட்சியினர் ஏதேனும் ஒரு வகையில், மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம் அல்லது அதற்கு ஈடாக பொருள் தருகின்றனர்.
மொபைல் போன்களுக்கு ஒரே நேரத்தில், மொத்தமாக "ரீசார்ஜ்' செய்வது; பால் வினியோகிப்பவர் வாயிலாக பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
டோக்கன் பெற்றுக்கொண்டு, வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்சியினர் தரும் டோக்கன் பெற்றுக்கொண்டு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என, பங்க்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தஞ்சை, ஈரோடு மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கூப்பன் விநியோகிக்கப்பட்ட அந்த 2 மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கட்சியினர், வாக்காளர்களின் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக புகார் இருந்தால், தேர்தல் புகார் மையத்துக்கு, வாக்காளர்கள் தெரிவிக்கலாம். புகார் உறுதி செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.