ஆமா, ஏன் பெட்ரோல், டீசலை மட்டும் ஜிஎஸ்டியில் சேர்க்கலை.. விலை குறைஞ்சிருமேன்னா.. மக்கள் கேள்வி!
பெட்ரோல் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை: ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கோடு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டு வரப்படவில்லை. அவ்வாறு கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலை வெகுவாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் விலைவாசி கட்டுக்குள் வருவதால் ஏழை நடுத்தர மக்களின் கவலைகள் குறைய வாய்ப்பும் உள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் எந்த மூலையிலும் ஒரே விலையில் பொருட்களை வாங்கிடமுடியும்.
அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அவ்வாறு கொண்டுவரப்பட்டால் மாநில அரசுகளின் வருமானம் இழப்பு ஏற்படும் என்பதால் பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசலுக்கு 57 சதவீத வரி
தற்போதுள்ள நிலவரப்படி பெட்ரோல் டீசலுக்கு மத்திய அரசு 23 சதவீதமும் மாநில அரசுகள் 34 சதவீதமும் என மொத்தம் 57 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் அதிகபட்சமாக 28 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக விலை குறையும்
ஜிஎஸ்டி வரி மூலம் மாநில அரசுக்கு பல்வேறு பொருள்களில் கூடுதல் வருவாய் கிடைப்பதைக் கொண்டு, பெட்ரோல் டீசல் மீதான வருவாய் இழப்பை ஈடு செய்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 47.67 க்கு குறைய வாய்ப்புள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் குறையும்
டீசல் விலையும் வெகுவாகக் குறைவதால் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் இழப்புக் குறையும். மேலும் காய்கறி மளிகை பொருட்களின் விலையும் வெகுவாகக் குறையும்.
டீலர்கள் சொல்வது என்ன?
தனியார் பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் இது தொடர்பாக கூறுகையில், ' நாள்தோறும் 5000 லிட்டர் வரையில் பங்குகளில் இருப்பு வைக்கப்படும். திடீர் என்று இதற்கும் ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டால் அந்த இருப்பில் உள்ள 5000 லிட்டருக்கு இழப்பு ஏற்படும்.
ஜிஎஸ்டி வந்தால் ஏற்றுக் கொள்வோம்
ஆனால் அரசு ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் டீசலை கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். விலைவாசி குறைவது எங்களுக்கும் நல்லதுதானே' என்று கூறினர்.