ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு!!
ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு கடந்த மாதம் வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆன்-லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும் டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழித்துவிடும் என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்-லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும் என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்-லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ள மருந்து வணிகர்கள் ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.