'பிஎச்டி படிக்கனும்னா படுக்கையை பகிரனும்'.. பாரதியார் பல்கலை.யில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்!
கோவை: பிஎச்டி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கில துறை பேராசிரியருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, சித்தாபுதூரை சேர்ந்தவர் அனிதா (28). இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பில் (பி.எச்டி) சேர்ந்தார். திருமணமாகி, 2 வயது குழந்தை உள்ள நிலையில், கணவரை இழந்துவிட்டார்.
இந்நிலையில், அனிதா நேற்று, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி அதிவீரபாண்டியனிடம் தனது 2 வயது குழந்தை மற்றும் பெற்றோருடன் நேற்று வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
கணவரை இழந்தவர்
அந்த மனுவில் அனிதா கூறியிருப்பதாவது: நான் கோவை பாரதியார் பல்கலையில் முழு நேர ஆங்கில பி.எச்.டி. படிப்பில் கடந்த 2010ல் சேர்ந்தேன். 2 ஆண்டுக்கு பின் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்கு சென்று என்னால் படிக்க முடியவில்லை. இதனால், எனது முழு நேர பி.எச்.டி பதிவு ரத்தானது. கடந்த 2013ல் என் கணவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டார். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு 2 வயதாகிறது.
பேராசிரியர் நெருக்கடி
இதுபோன்ற சூழ்நிலைகளால் எனது வருகைப்பதிவேடு குறைந்தது. நான் உடல் நலம் தேறி, படிப்பை தொடர்ந்தபோது, ஆங்கில பாட துறையின் தலைவர் சரவண செல்வன் எனது வருகை பதிவு குறைவாக இருப்பதாக காரணம் காண்பித்து ஆராய்ச்சி படிப்பை தொடர முடியாது என்றார். ஆராய்ச்சி படிப்பை நான் தொடர வேண்டுமானால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், அதுதவிர ஒன்றரை லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றும், கட்டாயப்படுத்தினார்.
மீண்டும் படிப்பில் சேர்ந்தார்
அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக நான் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சையிடம் புகார் தெரிவித்தேன். அவரது தலையீட்டினால் எனக்கு பி.எச்.டி படிக்க கடந்த மார்ச் மாதம் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் சரவணசெல்வன் எனது ‘வைவா' ரிப்போர்ட்டில் கையெழுத்து போட மறுத்து விட்டார்.
பெண்கள் நிலை
வருகை பதிவேட்டில் நான் கையெழுத்து போட விடாமல் தடுத்து தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார். அவரை அனுசரித்து செல்லாமல் நான் படிக்க முடியாது என மிரட்டுகிறார். அவரின் டார்ச்சருக்கு பல்கலைகழகத்தில் ஒருவர் துணையாக இருக்கிறார். அவர் அனுசரித்தால்தான் காரியம் நடக்கும் என்கிறார். இதுபோன்ற கேவலமான நிலையில் எப்படி பெண்கள் கல்வி கற்க முடியும்.
படிப்பு பாதிப்பு
இவர்களால் நான், எனது ஆராய்ச்சிப் படிப்பை தொடர முடியவில்லை. இதேபோல் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆங்கில துறை தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாணவி அனிதா புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருகை இல்லை
இதுகுறித்து குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, ஆங்கில துறை தலைவர் சரவணசெல்வன் கூறுகையில், ‘மாணவி அனிதா 3 ஆண்டு பி.எச்.டி முழு நேர படிப்பில் சேர்ந்தார். அவரது வருகை 116 நாள்தான் இருந்தது. பின்னர் 2012ல் இடைநிறுத்த, சான்று கேட்டு விண்ணப்பித்தார். மீண்டும் அவர் 2014ல் முழு நேர பி.எச்.டி தொடர விண்ணப்பித்தார். முழுமையான காலத்தில் அவர் படிக்கவில்லை, அவருக்கு போதுமான வருகை பதிவு இல்லை.
பொய் குற்றச்சாட்டு
விதிமுறையை கூறியதற்காக, என்மீது அபாண்ட பழி சுமத்தப்படுகிறது. என் மீது கூறிய புகார் காரணமாக எனக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த புகாரால் என் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விசாரணையை எதிர்கொண்டு உண்மையை நிரூபிப்பேன்'' என்றார். இதற்கிடையில், மாணவி அனிதா, பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர் ஆகியோரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
ஆதாரம் இல்லை
இந்தப் புகார் குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறும்போது, ‘சிண்டிகேட் உறுப்பினர்கள் தலைமையில் துறைத் தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து விசாரிக்கப்பட்டதில், இந்தப் புகார் பொய்யானது என்று தெரியவந்தது' என்றார்.