பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனில் பெண்களின் புகைப்படங்கள்... பரபர விசாரணை
பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளுக்கு செல்போன் மூலம் பேசி உயரதிகாரிகளிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள மூளைச்சலவை செய்தார் என்பது அவர் மீதான புகார். இந்த விவகாரத்தில் நேற்று பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார்.
மாணவிகளிடம் பேசிய நிர்மலா தேவி, 110 பேர் அங்கு செயல்படுகிறார்கள், என்னைப்போல் 400 பேர் இதற்காக செயல்படுகிறார்கள் என்கிறார். ஆளுநர் மீட்டிங்கில் நான் எந்த அளவுக்கு அருகில் சென்று வீடியோ பிடிக்கும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கிறது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
பெரிய லெவலில் ஆட்கள்
மேற்படிப்பு படிக்க ஆசையில்லை அரசுத் துறையில் தேர்வு எழுதப்போகிறோம் என்று மாணவிகள் தட்டிக்கழித்தாலும், நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன், இந்த டிஎன்பிஎஸ்சி எல்லாம் சாதாரணம். ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்கவும் ஏற்பாடு செய்து தருகிறேன். பணம் உங்க அக்கவுண்டுக்கு வரும் என்று பேசி பேசி மூளைச்சலவை செய்கிறார்.
விஐபி யார் தெரியுமா?
மாணவிகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றவுடன் பெரிய லெவலில் தொடர்பு உள்ளது, எதிர்காலம் சொர்க்கமாக இருக்கும் என்று ஆசை காட்டும் அவர், நான் சொல்லும் விஐபி பேரைக்கேட்டால் அப்புறம் நீங்களே தானே வந்துவிடுவீர்கள் அப்படி ஒரு ஆள் என்று கூறி வலையை வீசுகிறார்.
நிர்மலா கருவிதான்
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது நிர்மலா தேவி மட்டுமே தவறு செய்தவரல்ல. அவர் பின்னால் மிகப்பெரிய நெட் ஒர்க் இருப்பது தெரியவருகிறது. நிர்மலா அம்புதான். அதை எய்த வில் எங்கே என்று விசாரிக்க வேண்டும். ஆளுநர் லெவலில் தெரியும் என்று கூறியுள்ளதால் ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகின்றனர் எதிர்கட்சியினர்.
செல்போனில் பெண்கள் படம்
தற்போது நிர்மலாவைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் உள்ள செல்போன் எண்களை தோண்டி துருவி வருகின்றனர். செல்போனில் அதிக அளவில் பெண்களின் புகைப்படங்களாக இருப்பது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஐபிக்கள் யார் யார்?
ஆளுநர் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விஐபிக்கள் யார் என்பது வெட்ட வெளிச்சமாகுமா? சிறுமியை சீரழித்த பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் பெயர்கள் பகிரங்கமாக தெரியவந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் திமிங்கலங்கள் தப்பிவிட வாய்ப்பு உள்ளது.