வெள்ள நிவாரணப் பணிக்காக உழைத்த காசில் பொருட்கள் வாங்கி வழங்கிய மாற்றுத்திறனாளி
திருச்சி: சென்னை வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிக்காக தன்னுடைய உழைப்பால் சம்பாதித்த பணத்தினை அளித்துள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏற்கனவே லாரிகளில் ஏராளமான உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் தனது நண்பர் உதவியுடன் ஒரு அட்டை பெட்டி பார்சலுடன் அங்கு வந்தார். அந்த அட்டை பெட்டியில் போர்வை, துண்டுகள் உள்பட துணி வகைகள், மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுக்களும் இருந்தன. சென்னையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புவதற்காக அவற்றை கலெக்டர் அலுவலகத்தில் அவர் ஒப்படைத்தார்.
சிறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் சூம்பிபோன சுரேஷ் கீரம்பூரில் வங்கி கடன் உதவி பெற்று கொல்லுப்பட்டறை நடத்தி வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் வாழ்ந்து வரும் சுரேஷ் தனது சொந்த செலவில் ரூபாய் 1000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாங்கி சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்புவதற்காக கொண்டு வந்ததாக கூறினார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தனது சொந்த செலவில் மனித நேயத்துடன் நிவாரண பொருட்கள் அனுப்பிய சுரேசை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.