மாற்றுத்திறனாளிகளை புண்படுத்திய பேச்சு.. ராதாரவி வீடு முற்றுகை.. போலீஸ் குவிப்பு
நடிகர் ராதாரவி மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும்படி ஒரு கூட்டத்தில் பேசினார். அதைக் கண்டித்து அவரது வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
சென்னை: நடிகர் ராதாரவி மாற்றுத் திறனாளி குழந்தைகள் மனம் புண்படும்படி மேடையில் பேசியதைக் கண்டித்து அவரது வீட்டை, மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
நடிகர் ராதாரவி அதிமுகவின் பேச்சாளராக இருந்தார். அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசுவதில் புகழ் பெற்றவர். அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்பதுபோல் நடித்துக் காண்பித்துப் பேசினார். அப்போது மேடையில் இருந்தவர்கள் அதனை ரசித்துக் கைதட்டினர்.
தற்போது அவருடைய இந்த மனிதம் இல்லாத பேச்சு பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. கனிமொழி தன் முகநூல் பக்க்த்தில் இதனைக் கண்டித்து எழுதியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சால் மனம் புண்பட்ட மாற்றுத் திறனாளிகள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நடிகர் ராதாரவி தற்போது திமுகவில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.