பிஸியோதெரபிஸ்ட்டை கூலிப்படை ஏவி கொலை செய்த சிஏ மாணவி.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்
திருச்சியில் பிஸியோதெரபிஸ்ட்டை கூலிப்படை வைத்துகொன்ற மாணவி மற்றும் கூலிப்படையினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
திருச்சி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை திருச்சியில் இளம் பெண் ஒருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி திருவாணைக்காவலிருந்து கல்லனை செல்லும் வழியில், காவிரி ஆறு வடகரையோரம் புற்றுக்கோயில் பகுதியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த கொலை தொடர்பாக திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு கொலையான நபரைப் பற்றி விசாரித்ததில், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அண்ணா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (37) என்பது தெரியவந்தது. இவர் பிஸியோதெரபி படித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
விஜயகுமார் ஜூலை 8 ஆம் தேதி தனது சொந்த ஊரான பொன்பரப்பியிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என்று பொன்பரப்பி காவல் நிலையத்தில் அவரின் மனைவி கற்பகாம்பாள் அளித்த புகாரின் பேரில் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக விஜயகுமாரை யார் கொலை செய்திருப்பார்கள் என்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட விஜயகுமார் என்பவர் திருச்சி உறையூரைச் சேர்ந்த சுப்பிரமணி செட்டியார் மகள் ஈஸ்வரி என்பவருடன் கடந்த 2 வருடமாக பழகி வந்துள்ளது தெரியவந்தது.
ஈஸ்வரி சென்னையில் சிஏ படித்து வந்ததால், அங்கே ஏதேச்சையாக விஜயகுமாருடன் சந்திப்பு ஏற்பட்டு இருவரும் சென்னையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
திருமணமாகாத ஈஸ்வரிக்கும் விஜயகுமாருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விஜயகுமார் ஈஸ்வரியை சண்டைபோட்டு திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ஈஸ்வரி தனக்கு தெரிந்த, திருச்சி காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த மாரிமுத்து (33), சிந்தாமணியைச் சேர்ந்த கணேசன்(23), திருச்சி வெனிஸ் தெருவைச் சேர்ந்த குமார்(28) ஆகியோர்களை கூலிப்படையாக வைத்து விஜயகுமாரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார். இவர்களுக்கு ஈஸ்வரி கொலை செய்வதற்கு முன்பணமாக ரூபாய் 55 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜுலை 8 ஆம் தேதி அன்று ஈஸ்வரி விஜயகுமாருடன் சென்னையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்துள்ளார். பின்னர் விஜயகுமார் தனது சொந்த ஊர் பொன்பரப்பிக்குச் சென்றுள்ளார். பின்னர், ஈஸ்வரி அழைத்ததன் பேரில் திருச்சி வந்த விஜயகுமாரை திருவாணைக்காவல் கல்லனை மெயின் ரோடு, காவிரி ஆறு வடகரையோரம் புற்றுகோயில் இறக்கத்தில் மணலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கே ஈஸ்வரி மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்துள்ளனர். பின்னர், விஜயகுமார் அணிந்து இருந்த செயின் மோதிரம் நகையை எடுத்துக்கொண்டு சென்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதனை போலீஸ் விசாரணையில் கொலை செய்த ஈஸ்வரி, மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள், இறந்தவரிடம் பறித்து சென்ற நகைகள் மற்றும் கொலை செய்வதற்கு ஈஸ்வரியிடம் வாங்கிய முன்பணம் ரூ.55,000 ஆகியவைகளைக் கைப்பற்றி நேற்று வியாழக்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த தனிப்படை போலீஸாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.